"வள்ளலார் - 200" - வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணை வெளியீடு
"வள்ளலார் - 200" ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில் கடலூர் மாவட்டம், வடலூரில் 99 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணையினை வழங்கி, சிறப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்து, புகைப்பட கண்காட்சி மற்றும் அன்னதானத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 5.10.2023 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார். மேலும், "வள்ளலாரின் இறை அனுபவங்கள்" என்ற நூலினை வெளியிட்டார்.
அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த அக்டோபர் 5 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் "தனிப்பெருங்கருணை நாள்" என கடைபிடிக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 5 ஆம் நாள் "தனிப்பெருங்கருணை நாளாக" கொண்டாடப்பட்டு வருகிறது.
2022–2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், "உயிர்த்திரள் ஒன்றெனக்கூறி தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்திய வள்ளல் பெருமானார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கமும் (25.05.2022) வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் (5.10.2022) ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் (5.02.2023) வரவிருப்பதால் இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா எடுக்கப்படும் இதற்கென ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவினை சிறப்புற நடத்திடும் வகையில் முனைவர் பி.கே.கிருட்டிணராஜ் வானவராயர் அவர்கள் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டு வள்ளலாரின் முப்பெரும் விழாவினை அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை, 52 வாரங்களுக்கு தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சிறப்பாக நடத்திட செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன.