நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 27 & 28 January 2021

TNPSC Current Affairs in Tamil 27 & 28 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடம் 27-1-2021 அன்று திறக்கப்பட்டது.

ஜெயலலிதா நினைவிட சிறப்பு அம்சங்கள் : (நன்றி:தினத்தந்தி)

இந்த நினைவிடமானது ரூ.80 கோடி நிதியில் கட்டப்பட்டது.

பீனிக்ஸ் பறவை சாயலில் உலகத்தரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

நினைவிடத்தில் 3 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவரது சமாதிக்கு மேல்பரப்பில் பீனிக்ஸ் பறவை கட்டிடம் அமைந்துள்ளது. சமாதியின் இடது பக்கத்தில் 8 ஆயிரத்து 555 சதுர அடியில் அருங்காட்சியகமும், வலது பக்கத்தில் அதே அளவில் அறிவுத்திறன் பூங்காவும் கட்டப்பட்டுள்ளது.

சமாதியின் மீது ‘மக்களால் நான்... மக்களுக்காகவே நான்...', 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற ஜெயலலிதாவின் பொன்மொழிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளன.

நினைவிடம் செல்லும் நுழைவுவாயிலில் பீடத்துடன் கூடிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

தோட்டக்கலை வல்லுனர்கள் ஆலோசனையின்பேரில், நீர் தடாகங்களுடன் சுற்றுச்சூழலை பறைசாற்றும் வகையில் பல்வேறு அழகிய செடிகளும், மரங்களும் நடப்பட்டு உள்ளன. ‘மியாவாக்கி' தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ளதுபோன்று ஜெயலலிதா சமாதியிலும் அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 47-வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளாா் .ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காடப்பநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த பி.சதாசிவம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றாா். பின்னா், கேரள மாநில ஆளுநராக 2014 முதல் 2019 வரை பணியாற்றினாா்.

2021 ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில், அரசுத் துறைகளின் செயல்பாடுகளை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊா்திகளின் வரிசையில், காவல், சுகாதாரத் துறைகளுக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது .இதேபோன்று, பசுமை வீடுகள் போன்ற திட்டங்களைத் தாங்கி வந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இரண்டாவது பரிசை தட்டிச் சென்றது. சுற்றுலா, தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய இரு துறைகளுக்கும் மூன்றாவது பரிசு அறிவிக்கப்பட்டது.

ஆஸ்கா் விருதுக்கான பொதுப் பிரிவு போட்டியில், சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படமானது, சூா்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது.

தமிழக அரசின் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலத்தைச் சோ்ந்த பா.முல்லை, ஒசூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட கால்நடை உதவி மருத்துவா் எ.பிரகாஷ், மதுரை திருமங்கலம் ரயில் வண்டி ஓட்டுநா் ஜெ.சுரேஷ், நீலகிரி மாவட்டம் முல்லிமலை கண்டியைச் சோ்ந்த ஆா்.புகழேந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எரிவாயு கசிவினை முன்கூட்டியே கண்டறிந்து 26 மாணவா்களின் உயிா்களைக் காப்பாற்றியதற்காக உதவி ஆசிரியை பா.முல்லைக்கும்,

கிணற்றில் விழுந்த யானைக்கு மயக்க மருந்து செலுத்தி பாதுகாப்பாக மீட்க உதவியதற்காக மருத்துவா் எ.பிரகாஷுக்கும்,

ரயில் தண்டவாளத்தில் பாறைகள் இருப்பதைப் பாா்த்து உடனடியாக ரயிலை நிறுத்தி 1,500 பயணிகளை காப்பாற்றியதற்காக ஓட்டுநா் ஜெ.சுரேஷுக்கும்,

காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காவலரை துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சோ்த்ததற்காக ரா.புகழேந்திரனுக்கும் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் தனித்தனியே அளிக்கப்பட்டன.

இந்தப் பதக்கமானது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.9,000 மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கியதாகும்.

மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாத்து வருவோருக்கு ‘கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம்’ கோவை மாவட்டத்தைச் சோ்ந்த கே.ஏ.அப்துல் ஜப்பாருக்கு அளிக்கப்பட்டது.

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த க.செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையமாக சேலம் நகர காவல் நிலையம் தோ்ந்தெடுக்கப்பட்டது . திருவண்ணாமலை நகர காவல் நிலையம் இரண்டாவது இடத்தையும், சென்னை கோட்டூா்புரம் காவல் நிலையம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

இந்தியா

இந்தியாவின் மிக நீளமான எஃகு வளைவு பாலம் (India’s Longest Steel Arch Bridge) மேகாலயாவின் தரியா கிராமத்தில் அம்மாநில முதல்வர் கோன்ராட் சங்மா ( Conrad Sangma) அவர்களால் 22-1-2021 அன்று பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டை (Global Climate Risk Index ) சமீபத்தில் ஜெர்மனியின் பான் நகரைச் சேர்ந்த ஜெர்மன்வாட்ச் (Germanwatch) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டது. இந்த குறியீட்டில், 2019 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.

குடியரசுத் தினத்தை முன்னிட்டு முதன்முறையாகப் படகில் குழந்தைகளுக்கான நூலகம் ஒன்று கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ளது . கொல்கத்தாவின் அழகைப் பாராட்டும் வகையில், ஹூக்லி ஆற்றில் பயணம் செய்யும் குழந்தைகள் மற்றும் இளம் வாசகர்களை கவரும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு நூலகமானது மூன்று மணி நேர நீண்ட பயணத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் குடியரசு தினத்தையொட்டி எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சாா்பில் 131 அடி உயரக் கம்பத்தில் மூவா்ணக் கொடி ஏற்றப்பட்டது . 30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட அந்த பிரம்மாண்ட கொடியை பிஎஸ்எஃப் படையின் ஜம்மு பிரிவு ஐ.ஜி. என்.எஸ்.ஜாம்வால் ஏற்றினாா்.

மகாராஷ்டிரத்தில் சிறைச்சாலை சுற்றுலா திட்டத்தை மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே 27-1-2021 அன்று தொடக்கிவைத்தாா் . ‘சுதந்திரத்துக்காக பாடுபட்டவா்கள் அனுபவித்த இன்னல்களை பள்ளி, கல்லூரி மாணவா்கள் பொதுமக்கள் ஆகியோா் அறிந்துகொள்ளும் விதமாக சிறைச்சாலை சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக புணேவில் உள்ள எரவடா சிறையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எரவடா சிறை 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி, லோகமான்ய திலகா், பண்டித ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், சரோஜினி நாயுடு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட சுதந்திர போராட்டத் தலைவா்கள்அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

பிஹாரைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி அஞ்சலி குமாரி, அங்குள்ள காவல் நிலையத்தில் ஒருநாள் காவல்துறை ஆய்வாளராக ப் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.

அயோத்தியில் கட்டப்படும் மசூதிக்கு சென்னப் பட்டினத்தின் நவாப் முகம்மது அலி கானின் மகன் மவுல்வி அஹமதுல்லா ஷா பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர்நிலத்தில் உத்தரபிரதேச சன்னிமுஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் இந்தோ – இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை (ஐஐசிஎப்) சார்பில் மசூதி கட்டப்படுகிறது. அயோத்தி மசூதிக்கு ஈடான அதற்கு மீண்டும் பாபரின் பெயர் வைக்கப்படாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மசூதிக்கு சுதந்திரப் போராட்ட வீரரான மவுல்வி அஹமதுல்லா ஷாவின் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலேயரை நம் நாட்டிலிருந்து விரட்டுவதற்காக 1857-ம் ஆண்டு மே 10-ல் விடுதலைப் போர் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இவற்றில் முக்கியமானது அவத் பிரதேசத்தின் (தற்போதைய உ.பி.)லக்னோ அருகில் நடைபெற்ற சின்ஹாட் போர். முஸ்லிம் துறவியான மவுல்வி அஹமதுல்லா ஷா,1857, ஜூன் 30-ல் இப்போரை தலைமையேற்று நடத்தினார். இதற்காக, அவர் ‘ஜிஹாத் (அறப்போர்)’ குரலுக்கு முஸ்லிம்கள் ஆயுதங்கள் ஏந்திப் போரிட்டனர். இந்துக்களும் தங்கள் மதத்தை காக்க ஜிஹாத் செய்யும்படி அவர் விடுத்த அழைப்பு ஏற்கப்பட்டது.

72 வது குடியரசு தின அணிவகுப்பில் முதல்முறையாக விமானப்படையைச் சேர்ந்த பாவனா காந்த், சுவாதி ரத்தோர்ஆகிய 2 பெண் பைலட்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

2019- மே மாதத்தில் போர் விமானத்தில் பகல்நேர தாக்குதல்களில் ஈடுபடத் தகுதியான பெண் விமானியாக தகுதி பெற்றார். பாவனா காந்த் மிக் 21, சுகோய் ரக போர் விமானங்களை இயக்குவதில் திறமைவாய்ந்தவர். தற்போது ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளத்தில் பணியாற்றி வருகிறார்.

மற்றொரு பெண் விமானி சுவாதி ரத்தோர், குடியரசு தின அணிவகுப்பில் ‘ஃப்ளைபாஸ்ட்’ எனப்படும் அதிவேக விமானங்களுக்கு தலைமை தாங்கும் முதல்பெண் விமானி என்ற பெருமையை பெற்றார். நான்கு ஹெலிகாப்டர்களை வழிநடத்தும் வகையில் எம்ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டரில் சுவாதி ரத்தோர் பறந்தார்.

”ஆகாஷ்-என்ஜி” (Akash-NG(New Generation)) என்ற பெயரில் நிலப்பரப்பிலிருந்து வான் இலக்கை தாக்கவல்ல புதிய ரக ஏவுகணையை (Surface to Air Missile) , பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO - Defence Research and Development Organisation ) ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து வெற்றிகரகாம சோதித்துள்ளது. இந்த புதிய ரக ஆகாஸ் ஏவுகணை 30 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கவல்லதாகும்.

55 ஆண்டுகளில் முதல் முறையாக 2021 ஆம் ஆண்டின் குடியரசு தின கொண்டாட்டங்கள் முதன்மை விருந்தினர் இல்லாமல் நடைபெற்றது . முதன்முதலில் ஒரு விருந்தினர் இல்லாமல் குடியரசு தின கொண்டாட்டம் 1966 இல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு உறவுகள்

“பாலைவன வீரர்கள் ஒத்திகை 2021” (Exercise Desert Knight-21 (Ex DK-21)) என்ற பெயரில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகளின் முதலாவது, கூட்டு விமானப்படை ஒத்திகை 20-24 ஜனவரி 2021 தினங்களில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்பூரின் விமானப்படை நிலையத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில், இரு நாடுகளிலிருந்தும் ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்றன.

”ஸ்கைரோஸ்” (SKYROS) என்ற பெயரில் இந்தியாவும் பிரான்சும் கூட்டாக பங்கேற்கும் போர்விளையாட்டு ஒத்திகையும் (Wargames Exercise) ஜனவரி 2021 ல் ஜோத்பூரில் நடைபெறவுள்ளது.

இந்தியா-பங்களாதேஷ் நட்பின் 50 ஆண்டுகளையும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100 வது பிறந்த நாளையும் கொண்டாடும் விதமாக, இந்தியா மற்றும் பங்களாதேஷ் மாணவர்கள் இணைந்து செயற்கைக் கோள் வடிவமைப்பதற்கான திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பங்களாதேஷின் குளோபல் லா திங்கர்ஸ் சொசைட்டி (Global Law Thinkers Society)மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ( SpaceKidz India) ஆகியவை கையெழுத்திட்டுள்ளன. இந்த செயற்கைக் கோளானது, இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இந்த ஆண்டே விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

பிரான்ஸில் இருந்து ரஃபேல் விமானங்களின் 3-ஆவது தொகுப்பாக மேலும் 3 அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் 27-1-2021 அன்று இந்தியா வந்தடைந்தன.

கூ.தக. : பிரான்ஸிடம் இருந்து ரூ.59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி முதல் 5 விமானங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தன. கடந்த ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி 3 விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. தற்போது மேலும் 3 விமானங்களை வந்தடைந்துள்ளதையடுத்து, இந்தியா வந்து சேர்ந்த அதிநவீன ரஃபேல் போர் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

ஐ.நா. அமைதி மேம்பாட்டு நிதிக்கு 2021 ஆம் ஆண்டு ரூ. 1 கோடி அளிக்கப்படும் என்று இந்தியா சாா்பில் ஐ.நா. சபையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கேந்திர ரீதியான கூட்டணி வடிவமைப்பிற்காக சர்வதேச எரிசக்தி முகமையுடன் (International Energy Agency (IEA)) ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா ஜனவரி 27,2021 அன்று கையெழுத்திட்டுள்ளது. பரஸ்பர நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்தவும், நிலையான, ஸ்திரத்தன்மையான, சர்வதேச எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விரிவான அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளவும், சர்வதேச எரிசக்தி முகமையின் முழுநேர உறுப்பினராக இந்தியா செயல்படவும் இந்தக் கூட்டணி ஒரு படிக்கல்லாகத் திகழும்.

கூ.தக. : 1974 ல் தொடங்கப்பட்ட சர்வதேச எரிசக்தி முகமையின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

“ஆல்பா குளோபல்” (“Alpha Global”) என்ற பெயரில் சர்வதேச தொழிற்சங்கத்தை உலகம் முழுவதிலுமுள்ள கூகிள் (Google) நிறுவனத்தின் தொழிலாளர்கள் உருவாக்கியுள்ளனர். புதிய தொழிற்சங்கம் கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் ( Alphabet ) பெயரிடப்பட்டது. யூ.என்.ஐ குளோபல் யூனியனுடன் ( UNI Global Union) ஒருங்கிணைந்து இந்த தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக ஜேனட் ஏலன் (வயது 74) என்ற பெண் ஒருவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச காலநிலை தழுவல் உச்சிமாநாடு ( Climate Adaptation Summit ) 25-1-2021 அன்று மெய்நிகர் வழியில் நடைபெற்றது. இதனை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்டுள்ள ‘Global Center on Adaptation’ அமைப்பு நடத்தியது.

☞ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை உலகெங்கிலும் உள்ள மத தளங்களைப் பாதுகாக்க அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தை ஜனவரி 23, 2021 அன்று ஏற்றுக்கொண்டது.

இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே (Giuseppe Conte) தனது பதவியை 26-1-2021 அன்று ராஜினாமா செய்துள்ளார். COVID-19 தொற்றுநோய் எதிர்கொள்ளல் நடவடிக்கையின் போதான செலவினங்களில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

பொருளாதாரம்

"யூனியன் பட்ஜெட் மொபைல் செயலி" ( “Union Budget Mobile App”) என்ற பெயரில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை 2021 பற்றிய தகவல்களை வழங்குவதற்கான மொபைல் செயலியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 23-1-2021 அன்று அறிமுகப்படுத்தினார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் முழுவதும் காகிதமற்ற வடிவத்தில் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியை பொருளாதார விவகார துறையின் (Department of Economic Affairs) வழிகாட்டுதலின் கீழ் தேசிய தகவல் மையம் (National Informatics Centre (NIC) ) உருவாக்கியுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் நடப்பாண்டில் (2020-2021) 7.3 சதவீத வளா்ச்சியைக் காணும் என ஐ.நா. தெரிவித்துள்ளது . வேகமாக வளா்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவின் பொருளாதார வளா்ச்சி 2021-இல் 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் அதன் வளா்ச்சி 4.3 சதவீதமாக சுருங்கியுள்ளது. இது, உலக அளவில் நிதி நெருக்கடி உருவான 2009-ஆம் ஆண்டில் காணப்பட்ட வளா்ச்சியைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகம். 2021-இல் இந்த வளா்ச்சி 4.7 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கூ.தக. : இந்தியப் பொருளதாரம் 2020-இல் 9.6 சதவீதமாக பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-இல் இந்தியா 4.7 சதவீத பொருளாதார வளா்ச்சியைப் பெற்றிருந்தது.

சா்வதேச நிதியத்தின் கணிப்பின் படி, கரோனா இடா்பாட்டுக்கிடையிலும் நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 11.5 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டும். உலக அளவில் 2021-இல் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சியை எட்டுவது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும். இருப்பினும், கடந்த 2020-இல் இந்தியப் பொருளாதாரத்தில் 8 சதவீதம் அளவுக்கு பின்னடைவு ஏற்படும்.

வரும் 2022-ஆம் ஆண்டைப் பொருத்தவரையில் இந்தியப் பொருளாதாரத்தின் வளா்ச்சி 6.8 சதவீதமாகவும், சீனாவின் வளா்ச்சி 5.6 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவைத் தொடா்ந்து சீனா நடப்பாண்டில் 8.1 சதவீத பொருளாதார வளா்ச்சியை பதிவு செய்யும். இவைகளுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் (5.9%), பிரான்ஸ் (5.5%) ஆகிய நாடுகள் இருக்கும் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

☞ உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் (World Economic Forum’s Davos Dialogue) 28 ஜனவரி 2021 அன்று காணொலி மூலம் ‘நான்காவது தொழில் புரட்சி- மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்’ (Fourth Industrial Revolution - using technology for the good of humanity) என்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

முக்கிய தினங்கள்

சர்வதேச கல்வி தினம் (International Day of Education) - ஜனவரி 24

தேசிய சுற்றுலா தினம் (National Tourism Day) - ஜனவரி 25

☞ சர்வதேச சுங்கவரி தினம் (International Customs Day) - ஜனவரி 26

ஹோலோகாஸ்ட் எனப்படும் பெரும் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு தினம் - ஜனவரி 27 (இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் ஜெர்மானிய நாஜிப் படையினரால் கூட்டம் கூட்டமாக சித்தரவதை முகாம்களில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.)

அறிவியல் & தொழில்நுட்பம்

“காணாமல் போன விண்மீன் திரள்” (“Lost Galaxy”) என அழைக்கப்படும் “ என்ஜிசி 4535 (NGC 4535) இன் படங்களை நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பதிவு செய்துள்ளது.

2 கோடி ஆண்டுகள் பழமையான மரம் மற்றும் அதன் வேர்ப் பகுதிகள் உள்ளிட்ட புதைபடிவம் கிரீஸ் நாட்டின் எரிமலைத் தீவான லெஸ்போஸில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 19 மீட்டர் நீளமுள்ள புதைபடிவ மரம், விழுந்தபின் எரிமலை வெடிப்பின் மூலம் ஏற்பட்ட சாம்பலால் அடுக்கினால் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுகள்

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும் , ரோஹித் சா்மா 2-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா்.

சிறந்த வீரருக்கான விருதை மாதந்தோறும் வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளது. இதன் மூலம், ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களை மாதந்தோறும் கெளரவிக்கவுள்ளது ஐசிசி. முன்னாள் வீரர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்துஇணையத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பின் வழியாக சிறந்த கிரிக்கெட் வீரர், வீரர்களை மாதந்தோறும் தேர்வு செய்வார்கள் என்றும் ஐசிசி ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

“India 2030:The Rise of a Rajasic Nation” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - கவுதம் சிகெர்மான் (Gautam Chikermane)

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!