Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான “வானவில் மன்றம்” திட்டம் பற்றி முழு தகவல்கள்

 அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்”  திட்டத்தை  முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  28.11.2022 அன்று   திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டூர் - பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  தொடங்கி வைத்தார். 


 குழந்தைகளிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளைக் காணும் மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல், தாம் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் நோக்கங்கள் ஆகும். 


தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் வானவில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் “எங்கும் அறிவியல், யாவும் கணிதம்” என்பதாகும். அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் இம்மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. 


அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலையும் கணிதத்தையும் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கற்பித்தலில் இதுவரை அவர்கள் கையாண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட ஆலோசனைகள் வழங்குவதற்கும், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 


இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 710 ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படுவார்கள். மேலும், அவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான (Experiments) கருவிகளை உடன் எடுத்து வருவார்கள். 


அரசுப் பள்ளிகள் தோறும் வரும் கருத்தாளர்கள் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து, ஆசிரியர்கள் துணையோடு மாணவர்களுக்கு பரிசோதனைகளை செய்து காண்பிப்பார்கள். மேலும், ஆசிரியர்களுக்கு அறிவியல் மற்றும் கணித வல்லுநர்களுடன் இணைய வழி (டெலிகிராம்) கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சக ஆசிரியர்களுடனான துறை சார்ந்த உரையாடலுக்கு வாய்ப்பு தருவதோடு, பிற ஆசிரியர்கள் அறிவியலையும் கணிதத்தையும் எவ்வாறு கற்றுத் தருகிறார்கள், மாணவர்களின் சந்தேகங்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று அறிந்து கொள்வதோடு, கற்பித்தல் முறைகளையும் பிறரிடம் இந்நிகழ்வின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். நவீன தொழிநுட்பங்களையும் கணிதம் சார்ந்த புதிய யுக்திகளையும் அறிந்து கொள்வதுடன், அவற்றை வகுப்புகளில் குழந்தைகளிடத்தில் பகிர்ந்து கொள்ளவும் இந்தக் கலந்துரையாடல் உதவும். 

நன்றி : TN DIPR  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot