நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 6-7 September 2020

 Current Affairs for TNPSC Exams 6-7 September 2020
தமிழ்நாடு
☛ இந்தியாவில் எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியல் 2019 ( ease of doing business ranking 2019) ல் தமிழகம் 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இப்பட்டியலில், கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழகம் 15 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
o மாநில தொழில் சீர்திருத்த செயல் திட்டம்- 2019 (State Business Reform Action Plan 2019) அடிப்படையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள, எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் , முதல் ஐந்து இடங்களை முறையே ஆந்திர பிரதேசம், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் பெற்றுள்ளன.
☛  இ - சஞ்சீவி இணையதள மருத்துவ சேவையில் தமிழகத்தில் நாகை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா
☛ புதிய கல்வி கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு 7-9-2020 அன்று நடைபெறுகிறது. ‘உயர்கல்வியை மேம்படுத்துவதில் தேசிய கல்வி கொள்கையின் பங்கு’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநில கவர்னர்கள், கல்வி மந்திரிகள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்கள்.
☛ "SPICE+" என்ற பெயரில் புதிதாக தொழில்தொடங்குவோர்கள் தங்களது நிறுவனத்தை பதிவு செய்வதை எளிதாக்குவதற்கான இணையதள படிவ வசதி யை (Web Form) மத்திய நிறுவனங்கள் விவகார அமைச்சகம் தொடங்கியுள்ளது.
☛ ”பேசிக்” ( (BASIIC)) எனப்படும் ‘அணுகல் மற்றும் பாதுகாப்பான இந்திய நகரங்களை கட்டமைத்தல்’ (Building Accessible Safe Inclusive Indian Cities (BASIIC) ) திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (National Institute of Urban Affairs (NIUA)) மற்றும் ஐ.ஐ.டி.ரூர்க்கீ (Indian Institute of Technology Roorkee (IIT-R)) 4-9-2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
☛ ‘இந்தியாவின் இளம் குழந்தைகளின் நிலை’ அறிக்கையை 4-9-2020 அன்று துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ளார். ‘மொபைல் கிரீச்சஸ்’ (Mobile Creches) எனும் அமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இளம் குழந்தை விளைவு குறியீடு ( Young Child Outcomes Index (YCOI) ) மற்றும் இளம் குழந்தை சுற்றுச்சூழல் குறியீடு (Young Child Environment Index (YCEI)) ஆகிய இரண்டு குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வறிக்கையின் படி, இளம் குழந்தை விளைவுகளின் குறியீட்டின் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களை முறையே, கேரளா, கோவா, திரிபுரா, தமிழ்நாடு மற்றும் மிஷோராம் ஆகியவை பெற்றுள்ளன.
☛ தேசிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனத்தை (National Institute of Tribal Research (NITR)) புது தில்லியிலுள்ள இந்திய பொது நிர்வாக கல்வி நிறுவனத்தின் (Indian Institute of Public Administration (IIPA)) வளாகத்தில் அமைப்பதற்காக மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் இந்திய பொது நிர்வாக கல்வி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
☛ ”எம்.டி.நியூ டைமண்ட் கச்சா எண்ணெய் கப்பல்” : பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.டி. நியூ டைமண்ட் என்ற டேங்கர் வகை கப்பல் குவைத் நாட்டின் மீமினா அல்ஹைதி துறைமுகத்திலிருந்து சுமார் 2 .70 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்திற்கு புறப்பட்ட போது, 3-9-2020 அன்று இலங்கையின் தென் கிழக்கே வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இலங்கை கடலோரக் காவல் படையினர் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை இணைந்து, தீயில் பெரும்பகுதியை அணைக்கட்டு தீ விபத்துக்கு உள்ளான ‘எம்டி நியூ டைமண்ட் கப்பல்’ பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை இன்று தெரிவித்துள்ளது .
☛  ”கிரண்” (“KIRAN”) என்ற பெயரில், மன நல மறுவாழ்விற்கான 24 மணி நேர இலவச தொலைப்பேசி (1800-500-0019) ஆலோசனை சேவையை மத்திய சமூகநல அமைச்சர் தாவர்சந்த் கெக்லாட் (Thaawarchand Gehlot) 7-9-2020 அன்று தொடங்கி வைக்கிறார்.
☛ தொழில் தொடங்குவதற்கான கிராம தொழில்முனைவோர் திட்டம் (Start-Up Village Entrepreneurship Programme (SVEP)) 2016 ஆம் ஆண்டு முதல், ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின், தீனதயாள் அந்தியோகியா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதரார திட்டத்தின் (Deendayal Antyodaya Yojana –National Rural Livelihoods Mission (DAY-NRLM)) கீழ் துணைத் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
☛ அடிப்படை உரிமைகள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பின் மனுதாரரும், கேரள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதியுமான கேசவானந்த பாரதி உடல்நலக்குறைவு காரணமாக 69-2020 அன்று காலமானார். இவர் 1961 ஆம் ஆண்டு எட்னீர் மடத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
கேசவானந்த பாரதி வழக்கு பற்றி ...
o கேரள அரசு நிலச் சீர்திருத்தச்சட்டத்தின் கீழ் எட்னீர் மடத்தின் நிலங்களை கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து கேசவானந்த பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். எஸ்.எம். சிக்ரி தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 1973, ஏப்ரல் 24 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ அரசியலமைப்பின் எந்தவொரு பகுதியையும் திருத்த செய்ய முடியும். அதேநேரத்தில் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு அல்லது முக்கிய அம்சங்களை மாற்றவோ திருத்தவோ அதிகாரமில்லை என்று அடிப்படை உரிமைகளை மீட்கும் தீர்ப்பாக அது இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் அதிக நாள்கள்(68 நாள்கள்) விசாரிக்கப்பட்ட வழக்காக இன்றும் கேசவானந்த பாரதி வழக்கு உள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
☛ அமெரிக்கா - இந்திய மூலோபாய கூட்டு மன்றத்தின் (US-India Strategic Partnership Forum (USISPF)) மூன்றாவது வருடாந்திர கூடுகை, 31-8-2020 முதல் 3-9-2020 வரையிலான 5 நாட்கள் இணைய வழியில், “அமெரிக்கா-இந்தியா புதிய சவால்களை வழிநடத்துகின்றன” (“US-India Navigating New Challenges”) எனும் மையக்கருத்தில் நடைபெற்றது, இக்க்கூடுகையில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
☛ ஓமன் நாட்டு பொதுப் பணித்துறையில் உள்ள வெளிநாட்டினர்களில் அதிகளவு இந்தியர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானின் மாநில புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல் தேசிய மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, ஓமன் அரசாங்கப் பணியில் உள்ள 2,29,386 பேரில் 34,000 பேர் வெளிநாட்டினர்கள் உள்ளனர்.அதில், அதிகபட்சமாக 12,453 இந்தியர்கள், 9,631 எகிப்தியர்கள், 1,325 பாகிஸ்தானியர்கள் ஆகிய நாட்டினர்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.
சர்வதேச நிகழ்வுகள்
☛ குவைத் நாட்டில் முதல்முறையாக 8 பெண்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .
☛ 4 நாடுகளில் பஞ்ச அபாயம்: போரால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோ, யேமன், வடகிழக்கு நைஜீரியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பஞ்சம் ஏற்படும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகளவை எச்சரித்துள்ளது.
முக்கிய தினங்கள்
☛ சர்வதேச அறக்கொடை தினம் ( International Day of Charity) - செப்டம்பர் 5 ( 1979 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கபப்டுகிறது.)
☛ முதலாவது, சர்வதேச நீல வானத்திற்கான தூய காற்று தினம் (International Day of Clean Air for blue skies ) - செப்டம்பர் 7
நியமனங்கள்
☛ ’இந்திய ஆட்டோம்மொபைல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்’ (Society of Indian Automobile Manufacturers(SIAM)) தலைவராக மாருதி சுசுகி இந்தியா (Maruti Suzuki India Ltd) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர் கெனிசி ஆயுகாவா (Kenichi Ayukawa) நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பம்
☛  பூமியில் அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்குவதற்கான அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான, ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் 60 ஸ்டார்ட்லிங்க் செயற்கைக்கோள்கள் 3-9-2020 அன்று ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.
☛ மறுபயன்பாட்டுக்குரிய சோதனை விண்கலத்தை (Reusable Experimental Spacecraft) சீனா செப்டம்பர் 4, 2020 அன்று லாங் மார்ச் -2 எஃப் கேரியர் ராக்கெட்டில் மூலம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் அமெரிக்கா அறிமுகப்படுத்திய எக்ஸ் -37 பி (X-37B ) போன்றது. இந்த விண்கலம் ஒரு விண்வெளியில் சுற்றுப்பாதையில் செயல்பட்ட பின்னர் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்தில் தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☛  உலகமெங்கும் மாணவர்களிடையே சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக் “The Little Book of Green Nudges” என்ற புத்தகத்தை ஐ.நா. சுற்றுசூழல் திட்டம் (UN Environment Programme (UNEP)) வெளியிட்டுள்ளது.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!