நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 3-4 January 2021

TNPSC Current Affairs 3-4 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ் அகாதெமியை தில்லி அரசு அமைத்து 3-1-2021 அன்று அறிவித்துள்ளது. இதன் தலைவராக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக தில்லி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் என். ராஜா ஆகியோரை நியமித்து தில்லி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது . இந்த அகாதெமி மூலம், தமிழ் மொழியிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்குபவா்களை ஊக்குவிக்க புதிய அகாதெமியின் கீழ் விருதுகள் வழங்கப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது. மேலும், தமிழ் மொழியைப் பயில படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தமிழக மக்களின் கலாசார திருவிழாக்களைக் கொண்டாடவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தில்லி அரசு தெரிவித்துள்ளது.

எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான கவிஞர் இளவேனில் (70) 2-1-2020 அன்று காலமானார். முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான உளியின் ஓசை திரைப்படத்தை இயக்கியவர் கவிஞர் இளவேனில். ‘புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்’ உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.

பிரபல திரைப்படத் தயாரிப்பாளா் கே.பி. ஃபிலிம்ஸ் பாலு காலமானார். கே.பி.ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'சின்னத்தம்பி', 'பாஞ்சாலங்குறிஞ்சி' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் பாலு.

இந்தியா

தேசிய அளவியல் மாநாட்டை (National Metrology Conclave) 2021 ஜனவரி 4 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார். 'நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அளவியல்' (Metrology for the Inclusive Growth of the Nation)என்பது இந்த மாநாட்டில் மையக்கருவாக இருக்கும்.

o இந்த நிகழ்வின் போது, தேசிய அணு கால அளவு (National Atomic Timescale) மற்றும் பாரதிய நிர்தேஷக் திரவியா (Bhartiya Nirdeshak Dravya) ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர், தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகத்துக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார்.

o 2.8 நானோ நொடிகள் என்னும் துல்லியத்துடன் இந்திய நிலையான நேரத்தை தேசிய அணு கால அளவு வழங்கும். சர்வதேச தரத்துக்கு இணையான தர உத்தரவாதத்தை வழங்குவதற்கான ஆய்வகங்களின் பரிசோதனை மற்றும் மேம்பாட்டுக்கு பாரதிய நிர்தேஷக் திரவியா ஆதரவளிக்கும். காற்று மற்றும் தொழிற்சாலை மாசு கண்காணிப்பு தளவாடங்களின் சான்றளிப்பில் தற்சார்புக்கு தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகம் உதவும்.

கூ.தக. : அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம்-தேசிய இயற்பியல் ஆய்வகம், புதுதில்லி(Council of Scientific and Industrial Research-National Physical Laboratory (CSIR-NPL), New Delhi), தேசிய அளவியல் மாநாடு 2020-ஐ ஏற்பாடு செய்கிறது.

’தேசிய காவல்துறை கே-9 பருவ இதழின்’ ( 'National Police K-9 Journal' ) முதல் பதிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் 2-1-2021 அன்று வெளியிட்டார். இது ஒராண்டிற்கு இருமுறை (ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில்) வெளியாகும் பருவ இதழாகும்.

இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜைடஸ் கேடிலா (Zydus Cadila) தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய உயிர் தொழில்நுட்பத்துறையும், ஜைடஸ் கேடிலா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான டிஎன்ஏ அடிப்படையிலான இந்த தடுப்பூசியை தயாரித்து உள்ளன. இது இந்தியாவில் டிஎன்ஏ அடிப்படையில் தயாரிக்கப்படும் முதல் தடுப்பூசியாகும்.

உலகின் செல்வாக்கு மிகுந்த மற்றும் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது . அமெரிக்காவின் மார்னிங்க் கன்சல்ட் என்ற சர்வே நிறுவனம் தனது ஆய்வில் இதனை அறிவித்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்து புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

கூ.தக. : இந்தியாவில் புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (கோவிஷீல்ட்-ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசி), ஹைதராபாதைச் சோ்ந்த பாரத் பயோடெக் (கோவேக்ஸின்), ஆமதாபாதில் உள்ள ஜைடஸ் கடிலா(ஜைகோவ்-டி) ஆகிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், கரோனா தொற்றுக்கு தடுப்பூசி தயாரித்து, வெவ்வேறு கட்ட களப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன.

சுயசாா்பு இந்தியா இலக்கை அடைவதற்கான மூன்று மந்திரங்கள் என, நிா்வாக மேலாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள், ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் அனைவருக்குமான திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழா 2021, தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று தொடங்குகிறது . டென்மார்க் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள திரைப்படம் ‘அனதர் ரவுண்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் உடல்நலக் குறைவு காரணமாக 2-1-2021 அன்று காலமானார் . பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பூட்டா சிங், 1986-1989 வரை ராஜீவ் காந்தி அரசில் மத்திய அமைச்சராக இருந்தார்.

‘குளோபல் பிரவாசி ரிஷ்தா’ ( Global Pravasi Rishta app) என்ற பெயரில் நெருக்கடி காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு உதவும் வகையில் புதிய மொபைல் ‘செயலியை’ மத்திய வெளியுறவுத்துறை அறிமுகம் செய்துள்ளது.

பீமா கோரேகான் போரின் 203-ஆவது ஆண்டு நினைவு தினம் 1-1-2021 அன்று அனுசரிக்கப்பட்டது.

கூ.தக. : 1818-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கும், மராட்டிய கூட்டமைப்பின் பேஷ்வா பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட பீமா கோரேகான் போரில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, புணே-அகமதுநகா் சாலையில் உள்ள பொ்னே கிராமத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ‘ஜெய ஸ்தம்பம்’ நினைவுச் சின்னத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறாா்கள்.

வெளிநாட்டு உறவுகள்

தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக இந்தியா, வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை இணைந்த திடீர் மழை வெள்ள வழிகாட்டும் சேவைகள் குழு வை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தொடங்கியது.

”காவி” (GAVI) எனப்படும் தடுப்பூசி மற்றும் நோயெதிர்ப்பிற்கான உலக கூட்டமைப்பில் (Global Alliance for Vaccines and Immunisation) உறுப்பினராக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஜாகி உர் ரகுமான் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூ.தக. : மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தினர். உலகையே அதிர வைத்த இந்த தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

சர்வதேச நிகழ்வுகள்

உலகப் புகழ் பெற்ற முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரான அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் கென்னத் எவரேட் சாலியர் காலமானார் . அமெரிக்க முன்னாள் அதிபர்ஜான் கென்னடி சுடப்பட்டபோது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களில் ஒருவராக சாலியர் இருந்தார். உலகில்முதன்முறையாக இணைந்து பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்து பிரித்துள்ளார்.

’ஃபுளூம்பர்க் உலக பணக்காரர்கள் பட்டியல் 2020” (Bloomberg Billionaires Index 2021 (as on 2nd January 2021)) ல் இந்தியாவின் முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்) உலகளவில் 12 வது இடத்தைப் பெற்றுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.5.6 இலட்சம் கோடி (90 பில்லியன் அமெரிக்க டாலர்). இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் பிஷோஸ், எலன் மாஸ்க் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோர் பெற்றுள்ளனர். இதன் மூலம், ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, சீன தொழிலதிபர் சாங் ஷான்ஷன் என்பவரிடம் இழந்துள்ளார்.

அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் (Pfizer-BioNTech) கூட்டாக உருவாக்கிய கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அவசரக்காலங்களில் செலுத்த ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

பொருளாதாரம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த டிசம்பா் 2020 மாதத்தில் ரூ.1.15 லட்சம் கோடியாக அதிகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது . முன்னதாக, கடந்த 2017 ஜூலை 1-இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 2019 ஏப்ரலில் வசூலான ரூ.1,13,866 கோடிதான் இதுவரையில் அதிகபட்ச ஜிஎஸ்டி அளவாகக் கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில், 2020 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் அதனை விஞ்சி சாதனை படைத்துள்ளது.

நியமனங்கள்

பாலின அடிப்படையிலான வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக #OrangeTheWorld என்ற உலகளாவிய பரப்புரைக்கு நல்லெண்ண தூதுவராக முன்னாள் உலக அழகி (Miss World 2017) மனுஷி சில்லர் (Manushi Chhillar) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

உலக பிரைய்லி தினம் (World Braille Day) - ஜனவரி 4 (பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்து படிப்பதற்கான பிரைய்லி எழுத்து முறையைக் கண்டுபிடித்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, லூயி பிரெயில் (Louis Braille) அவர்களின் பிறந்த தினத்தில் (4 ஜனவரி 1809) அனுசரிக்கப்படுகிறது.)

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!