தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை 2022 வெளியிடப்பட்டது
தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை 2022-யை “நாளையை நோக்கி இன்றே - தலை நிமிர்ந்த தமிழ்நாடு” எனும் தொழில் வளர்ச்சி - 4.0 (Industry 4.0) மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 11.8.2022 அன்றுவெளியிட்டார்.
இக்கொள்கை மூலம், மாநிலத்தில் உற்பத்தி மேற்கொள்ளும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ஊக்கத்தொகுப்புச் சலுகை அளிக்கப்பட்டு, இத்துறையின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, இக்கொள்கை பெருமளவில் ஆதரவு வழங்கிடும். இக்கொள்கையின் மூலம் 10 ஆண்டு காலகட்டத்திற்குள் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : 2019ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்பாதை என்ற திட்டத்தை இந்திய அரசு அறிவித்த பிறகு இந்தத் துறையில் மாநில அரசின் கவனம் திரும்பியது. ஏற்கெனவே தொழிற்சாலை அமைந்துள்ள இடங்கள், உதிரி பாகங்கள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து இடங்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழிற்பாதைக்கான இடங்களாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஐந்து மாவட்டங்களை மையமாகக் கொண்டு, 21 மாவட்டங்களில் பாதுகாப்புத் தொழில்துறைக்கான தொழிற்சாலைகள் அமைக்க ஊக்குவிக்கப்படும். விமானங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிப்பது, கவச வாகனங்கள் டேங்க்களைத் தயாரிப்பது, விமான பழுதுபார்ப்பு, பராமரிப்பு, ஏவுகணை, ராக்கெட், வெடி மருந்து தயாரிப்பு, சென்சார்கள், ரடார்கள், தகவல் தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பு, சிறிய ரக ஆயுதங்கள், ரைஃபிள்கள், கப்பல் கட்டுதல் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்த கொள்கையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.