“தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை” முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.12.2022 அன்று சென்னையில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற மாநாட்டில் தொடங்கி வைத்தார்.
2021-2022 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், காலநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, "தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்” 500 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கத்துடன், இந்தியாவில் முதன்முதலாக 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தை' (TNGCC) தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
மேலும், வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசினைக் குறைத்தல், கடலோர வாழ்விடங்களைப் புனரமைத்தல், சதுப்புநிலக் காடுகள் மற்றும் பிற சிறப்பினங்களை உருவாக்குதல், கழிவுகளிலிருந்து எரிசக்தி, பசுமை மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உயிர்க்கவசங்களை உருவாக்குதல், காலநிலை கல்வியறிவு மற்றும் சீர்மிகு கிராமங்கள் தொடர்பான அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 2021-2023 ஆம் ஆண்டுகளில் 77.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மாவட்ட அளவில் காலநிலை இயக்கங்கள் அமைக்கப்பட்டன.
குறிப்பிடத்தக்க ஒரு நடவடிக்கையாக, மாவட்ட வன அலுவலர்கள் (DFO) காலநிலை அலுவலர்களாக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடற்கரைகளுக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம் நிலையான சுற்றுலா மற்றும் ஆரோக்கியமான கடலோர நிருவாகத்தை திட்டமிடவும், மேம்படுத்தவும், கடற்கரைகளில் உள்ள மாசுக்களைக் குறைக்கவும் மற்றும் சர்வதேச தர அளவீட்டிற்கு கடற்கரைகளை உயர்த்தவும் தேவையான அம்சங்களுடன் கடற்கரைகளுக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தினை தமிழகத்தில் சீரிய முறையில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள பத்து கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறும் வகையில், பத்து கடற்கரைகளில் அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ளும் பொறுப்பினை தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையத்துக்கு வழங்குவதற்கான ஒப்பந்தக் கடிதத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
திறன்மிகு கிராமங்கள் திட்டம் சூரிய ஒளி ஆற்றலை முழு அளவில் பயன்படுத்துதல், காலநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை அளித்தல், கழிவு மற்றும் நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு மற்றம் பசுமை மேம்பாடு ஆகியவற்றினை கிராமங்களில் உருவாக்கி, அந்த கிராமத்தினை திறன்மிகு கிராமமாக மாற்றும் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களைத் தேர்வு செய்து, அவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து செயல்படுத்த, உலக வள ஆதார நிறுவனத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்பந்தக் கடிதத்தை வழங்கினார்.
பசுமைப் புத்தாய்வுத் திட்டம் காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளவும், அதனை ஏற்று வாழ்வதற்குரிய பல்வேறு உத்திகளைக் கண்டறியவும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, மாவட்டத்திற்கு உகந்த காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கும், மாவட்டந்தோறும் பசுமைத் திறனாளர்கள் தேர்வு செய்யும் திட்டத்தினை செயல்படுத்துவதற்காகவும், பசுமைத் திறனாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பினை, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்வி மையத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்பந்தக் கடிதத்தை வழங்கினார்.
பசுமைத் தொன்மங்கள் திட்டம் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக பசுமைத் தொன்மங்கள் திட்டம் நிறைவேற்றப்படும்.
இத்திட்டத்தில் முதலாவதாக, தமிழகத்தில் இரு கோவில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு காலநிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாதிரி கோவில்களாக உருவாக்கப்படும். இவை மீள்திறன், நீர் உபயோகத்திறன், கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு வகையில் காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடியவையாக மாற்றப்படும்.
பசுமைப் பள்ளிகள் திட்டம் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரங்களின் அருமை பெருமைகளை உணர்த்தவும், மரபுசாரா எரிசக்தியின் பயன்பாட்டை உணரவும், மாநிலத்தில் 25 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளிகளில் சூரிய ஒளி தகடுகளை அமைத்து, அதன்மூலம் பெறப்படும் மின்சாரத்தை பள்ளிகளின் பயன்பாட்டுக்கும், மின் மோட்டார் மூலம் அங்குள்ள மூலிகை, காய்கறித் தோட்டங்கள் அமைத்து, அப்பள்ளிகள் பசுமைப் பள்ளிகளாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முகமையாக பள்ளிக் கல்வித் துறை செயல்பட்டு வருகிறது.
கூ.தக. : காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தமிழக அரசின் பிற முன்னெடுப்புகள் :
- "பசுமைத் திட்டங்களுக்கான" அனுமதியை இனிமேல் ஒற்றைச் சாளர முறையில் வழங்கும் வகையில், தொழில்துறையில் உள்ள Guidance TN-ஆல் திட்டங்கள் வகுக்கப்படும். இந்த முடிவு 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் முயற்சியில் பெரும் பங்கு வகிக்கும்.
- புதுப்பிக்கக்கூடிய ஆற்றலைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச்செல்லவும் தனியான பசுமை வழித்தடம் (Green Corridor) உருவாக்கப்படும்.
- காற்றாலைகளைப் புதுப்பிப்பதற்கான புதிய கொள்கை (Re-Powering Policy) எரிசக்தித் துறையால் வெளியிடப்படும்.
- அனைத்துத் திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பார்வையில் பார்த்து, ஆய்வுசெய்து செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாடு அரசு 1,000 கோடி ரூபாயில் Green Climate Fund – பசுமை நிதியம் ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக, நூறு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சூழல் சார்ந்த கட்டுமானங்களை உருவாக்குவதற்கு தேசிய அளவிலும் உலக அளவிலும் நிதி திரட்ட இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.
- காலநிலை மாறுபாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுழற்சிப் பொருளாதாரம், வளங்குன்றா வளர்ச்சி போன்ற துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவங்குவோருக்கு தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும்.
- காலநிலை மாற்றம் குறித்து பள்ளி தொழில்முனைவோர் கொண்டுசேர்க்க கல்லூரி மாணவர்கள், என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் "காலநிலை அறிவு இயக்கத்தை" (Climate literacy) தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.
- கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தை பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.
- கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு சதுப்புநிலம்தான் இருந்தது. அது இப்போது, 13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- அருகிவரும் உயிரினங்களான கடல்பசு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாக்க காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- காலநிலைமாற்றம் தொடர்பான அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைக்க இந்தியாவிலேயே முதல்முறையாக "Tamil Nadu Green Climate Company" உருவாக்கப்பட்டு இவற்றை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
- மக்கள் கடைகளுக்கு செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச் செல்லவேண்டும், பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான குறியீடாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்க, காலநிலை எதிர்கொள்ள, "காலநிலை மாற்ற நிர்வாகக் குழு" முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசின் சுற்றுசூழல் துறையின் பெயர் "சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை” என்று மாற்றப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழகத்தின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
- இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070- ஆம் ஆண்டிற்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : TN DIPR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.