நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 9-11 September 2020

 Current Affairs for TNPSC Exams  9-11 September 2020

தமிழ்நாடு

v தமிழகத்தில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் வழக்கறிஞர் எனும் பெருமையை வழக்கறிஞர் விக்டோரியா கவுரி பெற்றுள்ளார். இவர் குமரி மாவட்டம் வெளிக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர்.

v தமிழ்நாட்டின் இரண்டாவது அதிநவீன மாநில தரவு மையம், ரூபாய் 74 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் 7-9-2020 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

v பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1,837 பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை முதல்வர் பழனிசாமி 8-9-2020 அன்று வெளியிட்டார். முன்னதாக, இந்த நூல்கள் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 19.2.2019 அன்று முதல்வர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

v CERT-TN (Computer Emergency Response Team) இணையதளம் துவக்கி வைப்பு : தமிழ்நாட்டின் இணைய பாதுகாப்பு கட்டமைப்பு (CSA-TN) திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக, Centre for Development of Advanced Computing (C-DAC) மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ள CERT-TN-‹ (Computer Emergency Response Team) https://cert.tn.gov.in என்ற இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

o கூ.தக. : , தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் உட்கட்டமைப்புகளான TNSWAN, TNSDC மற்றும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் மின் ஆளுமை சேவைகளை இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளிலிருந்து கண்காணித்து, தடங்கலற்ற மற்றும் பாதுகாப்பான இணைய சேவையினை வழங்கும் பொருட்டு 'தமிழ்நாட்டிற்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்' (Cyber Security Architecture for Tamil Nadu) செயல்படுத்தப்படும் என 1.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பிப்பை நிறைவேற்றுவதில் ஒருபகுதியாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

v இந்தியாவில் எழுத்தறிவு வீதம் : தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (National Statistical Office (NSO)) வெளியிட்டுள்ள, தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (National Sample Survey) 75வது சுற்றின் (ஜீலை 2017 முதல் ஜீன் 2018 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்) அறிக்கையின் படி, எழுத்தறிவு வீதத்தில் (literacy rate) கேரளா 96.2% த்துடன் முதலிடத்திலும், 2,3,4 மற்றும் 5ஆம் இடங்களை முறையே தில்லி, உத்தரக்காண்ட், ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களும் உள்ளன. மிகக்குறைந்த எழுத்தறிவு வீதம் உடைய மாநிலங்களில் முதலிடத்தில் ஆந்திரப் பிரதேசமும் (66.4%), அடுத்தடுத்த இடங்களில் முறையே ராஜஸ்தான் (69.7%), பீகார் (70.9%), தெலுங்கானா (72.8%), உத்தரப்பிரதேசம் (72.8%) ஆகியவை உள்ளன.

o இந்தியாவின் ஒட்டுமொத்த எழுத்தறிவு வீதம் 77.7% ஆக உள்ளது. ஊரகப் பகுதிகளில் எழுத்தறிவு வீதம் 73.5% ஆகவும், நகர்புறங்களில் எழுத்தறிவு வீதம் 87.7% ஆகவும் உள்ளது.

o தேசிய அளவில் ஆண்களின் கல்வியறிவு வீதம் 84.7% ஆகவும், பெண்களின் கல்வியறிவு வீதம் 70.3% ஆகவும் உள்ளது.

o கூ.தக. : எழுத்தறிவு வீதம் என்பது, 7 வயது மற்றும் அதற்கு மேலுள்ள நபர்களின் எழுத்தறிவைக் குறிப்பதாகும்.

v உலக பொருளாதார சுதந்திர குறியீடு 2020 (Global Economic Freedom Index, 2020) ல் இந்தியா 105 வது இடத்தைப் பெற்றுள்ளது . கடந்த ஆண்டு (2019) 79 வது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது. The Heritage Foundation மற்றும் The Wall Street Journal மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

v இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி ஆம்புலன்ஸ் சேவை (integrated air ambulance service ) கர்நாடக அரசினால் பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது.

v இந்தியாவின் மிகப்பெரிய பன்றி இறைச்சிப் பண்ணையை ரூ. 209 கோடி மதிப்பில் மேகாலயாவில் 10-9-2020 அன்று மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரி தொடங்கி வைத்தார்.தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ‘ ஆத்ம நிர்பார்’ (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் ஒதுக்கிய ரூ. 209 கோடியில் இந்த பன்றி இறைச்சி பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.

v தென்னிந்தியாவில் முதல் மற்றும் இந்தியாவின் இரண்டாவது கிஷான் இரயில் சேவை ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் இருந்து தில்லிக்கு 9-9-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

o கூ.தக. : வேளாண் பொருள்களை ஏற்றிச்செல்வதற்கான , நாட்டின் முதல் கிஸான் ரயில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தேவலாலியில் இருந்து பிகார் மாநிலம் தானாபூருக்கு தொடக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

v பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் 10-9-2020 அன்று முறைப்படி இணைக்கப்பட்டது . அரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இந்த 5 விமானங்களும் இணைக்கப்பட்டன. பாரம்பரிய முறைப்படி சர்வ தர்மா பூஜையுடன் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பதவுரியா, பிரான்ஸ் பாதுகாப்பு மந்திரி ப்ளோரன்ஸ் பார்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

v இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம்: : இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனைகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. தன்னார்வலர் ஒருவருக்குக் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

v இ-கோபாலா செயலி” ( e-Gopala App ) : விவசாயிகள் நேரடியாகப் பயன்படுத்துவதற்கான விரிவான இன மேம்பாட்டு சந்தை மற்றும் கால்நடை பராமரிப்பை ஊக்குவிக்கும் வகையில் இ-கோபாலா செயலியை பிரதமர் மோடி அவர்கள் 10-9-2020 அன்று தொடங்கிவைத்தார்.

v அயோத்தியில் ராம் பகவான் என்ற பெயரில் விமான நிலையம் அமைய உள்ளது. அதற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்படுகிறது.

v வந்தே பாரத்” திட்டத்தின் மூலம், இதுவரையில், 13.74 லட்சம் (கரோனா தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய) இந்தியர்கள் விமானங்களின் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் ஏர் இந்தியா விமானம், தனியார் மற்றும் வெளிநாட்டு விமானம், வெளிநாட்டு சிறப்பு விமானம் மற்றும் கப்பல்கள் என அனைத்தும் அடங்கும் என கூறினார். இந்தத் திட்டம் தற்போது 6-ம் கட்டத்தில் உள்ளது. இது செப்டம்பர் 1-ல் தொடங்கி அக்டோபர் 24 வரை 1,007 சர்வதேச விமானங்களில் 2 லட்சம் பேரை இந்தியாவிற்கு அழைத்து வரவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

v இந்தியாவில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

o உலக நாடுகளில் கடந்த 1990-ஆம் ஆண்டில் 1.25 கோடி 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இறந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் 52 லட்சமாக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியாவில் 5 வயதை எட்டுவதற்குள் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 34 லட்சத்திலிருந்து 8.24 லட்சமாகக் குறைந்தது.

o கடந்த 1990-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,000 குழந்தைகளுக்கு 126 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 34-ஆகக் குறைந்தது. இதன் மூலமாக சுமார் 30 ஆண்டுகளில் இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் ஆண்டுதோறும் 4.5 சதவீதம் குறைந்துள்ளது.

o அதே வேளையில், இந்தியாவில் பிறந்து ஒரு வயதை எட்டுவதற்குள் இறக்கும் குழந்தைகளின் விகிதம் கடந்த 1990-ஆம் ஆண்டில் (1,000 குழந்தைகளுக்கு) 89-ஆக இருந்தது. இந்த விகிதம் கடந்த ஆண்டில் 28-ஆகக் குறைந்தது. அதே காலகட்டத்தில், பிறந்து 28 நாள்களுக்குள் இறந்த குழந்தைகளின் விகிதம் (1,000 குழந்தைகளுக்கு) 57 என்ற எண்ணிக்கையில் இருந்து 22-ஆகக் குறைந்துள்ளது.

o இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மேம்பட்டுள்ளதன் காரணமாகவே குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது. மேலும், குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதைத் தடுப்பது, பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களைத் தடுப்பது, குழந்தைகளுக்கு போதுமான கால இடைவெளிகளில் தடுப்பூசி போடுவது உள்ளிட்டவற்றை இந்தியா திறம்பட மேற்கொண்டு வருகிறது

v மீன்வளத்துறைக்கான ”மத்ஸ்ய சம்பட யோஜ்னா” (PM Matsya Sampada Yojana) திட்டத்தை பிரதமர் மோடி 10-9-2020 அன்று தொடங்கி வைத்தார். அடுத்த 3-4 ஆண்டுகளில் எங்கள் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, மீன்வளத் துறைக்கு ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டமானது, 2020 முதல் 5 ஆண்டு காலத்திற்கு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

முக்கிய அம்சங்கள் :

o 2024-25 ஆம் ஆண்டில் மீன் உற்பத்தியை 70 லட்சம் டன்னாக உயர்த்துதல்

o மீன்வளத் துறையின் அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை 10% ஆகக் குறைத்தல்

o மீன்வளத் துறையில் 55 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்குதல்

வெளிநாட்டு உறவுகள்

v இந்தியா - ஜப்பான் இடையே, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் பரிமாற்றம் தொடா்பாக, ராணுவ ஒத்துழைப்பு தொடா்பான ஒப்பந்தம் 9-9-2020 அன்று மேற்கொள்ளப்பட்டது. இந்தியா - ஜப்பான் ஆயுதப் படைகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, இருதரப்பு கூட்டு பயிற்சி நடவடிக்கைகள், ஆயுதங்கள் மற்றும் சேவைகள் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்

v இந்திய மாதுளை பழம் இறக்குமதிக்கு ஆஸ்திரேலியா முதல் முறையாக அனுமதி அளித்துள்ளது.

v சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு (International Solar Alliance (ISA)) முதலாவது உலக சோலார் தொழில்நுட்ப உச்சிமாநாடு (World Solar Technology Summit) 8-9-2020 ல் இணையவழியில் நடைபெற்றது. இதனை சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)) இணைந்து நடத்திய இந்த மாநாட்டை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

o இந்த உச்சி மாநாட்டின் போது, ’சோலார் காம்பஸ் 360’ (Solar Compass 360) என்ற பெயரில் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆராய்ச்சி இதழ் தொடங்கப்பட்டது.

o ”I JOSE” (ISA Journal on Solar Energy) என்ற பெயரில் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் சூரிய ஆற்றல் ஆராய்ச்சி இதழ் தொடங்கப்பட்டது.

o கூ.தக. : 121 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டில், பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டின் போது இந்தியாவினால் முன்மொழியப்பட்டு தொடங்கப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையிடம் ஹரியானா மாநிலம் குருகிராமில் (Gurugram) அமைந்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

v உலக மக்கள்தொகை 2100-ம் ஆண்டில் 1,100 கோடியைத் தாண்டும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது . இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற இடத்தை 2100-ல் பிடிக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் நைஜீரியா, சீனா இடம்பெறும். இந்த நூற்றாண்டின் முடிவில் உலக மக்கள்தொகை எப்படியும் 1,100 கோடியைத் தாண்டும் என்று 2015-ம் ஆண்டிலேயே ஐ.நா. சபை கணித்தது குறிப்பிடத்தக்கது.

o கூ.தக. : தற்போது உலக மக்கள்தொகை 780 கோடியாக உள்ளது. ஐநாவின் ஆய்வுப்படி 2030-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 805 கோடியாக அதிகரிக்கும். 2050-ம் ஆண்டில் 970 கோடியாக உயரும். 2100-ம் ஆண்டில் 1090 கோடியை எட்டும். தனிமனித ஆயுட்காலம் உயருவதன் விளைவாக மொத்த மக்கள் தொகையில் கால் பகுதியினர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார்கள். அதேபோல மக்கள்தொகைப் நெருக்கத்தின் அளவீடும் மாறும். இதில் 2100-ம் ஆண்டு வாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு நைஜீரியாவில் 856.3 பேரும், இந்தியாவில் 331.6 பேரும், பாகிஸ்தானில் 281.2 பேரும் வசிக்கும் நிலை ஏற்படும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

v அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயர் : அமெரி்க்காவைச் சேர்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நார்த்ராப் க்ரூம்மான் நிறுவனம் தன்னுடைய அடுத்த சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் வர்த்தகரீதியான கார்கோ விண்கலத்துக்கு (என்ஜி-14 சைக்னஸ் விண்கலம்) “எஸ்எஸ் கல்பனா சாவ்லா” என்று பெயர்சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

o கூ.தக. : கடந்த 2003-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி கொலம்பியாவில் கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்கள் பயணித்த விண்கலம் வானில் வெடித்துச் சிதறியதன் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

v சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day) - செப்டம்பர் 8 | மையக்கருத்து - ’கோவிட்-19 சூழல் மற்றும் அதற்கு அப்பால் எழுத்தறிவு மற்றும் கற்றல்’ (“Literacy teaching and learning in the COVID-19 crisis and beyond” )

v இமாலய தினம் (Himalyan Day) - செப்டம்பர் 9

v உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day) - செப்டம்பர் 10

விருதுகள்

v ”இந்திராகாந்தி அமைதி பரிசு 2019” (Indira Gandhi Peace Prize for the year 2019) இங்கிலாந்தைச் சேர்ந்த சர் டேவிட் அட்டன்பரோ (Sir David Attenborough) விற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளையின் (Indira Gandhi Memorial Trust) மூலம் இந்த விருது கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

v தமிழகம், கேரள மாநிலங்களை உள்ளடக்கிய சென்னையில் இயங்கும் லக்ஸம்பர்க் தூதரகத்தின்கவுரவ தூதராக சேதுராமன் மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு இப்பதவியைவகித்த சுஹாசினி மணிரத்னத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, சேதுராமன்மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

v நிதி அயோக் அமைத்துள்ள பல்பரிமாண வறுமை குறியீடு ஒருக்கமைப்பு குழுவின் ( Multidimensional Poverty Index Coordination Committee ) தலைவராக சன்யுக்தா சமாதர் (Ms Sanyukta Samaddar ) நியமிக்கப்பட்டுள்ளார்.

o கூ.தக. : உலக பல்பரிணாம வறுமைக் குறியீட்டில், இந்தியா 62 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

v ‘சுக்கா, மிளகா சமூகநீதி’ என்ற பெயரில் புதிய புத்தகத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

விளையாட்டு

v "அனைத்திந்திய டென்னிஸ் சங்கத்தின் (All India Tennis Association(AITA)) தலைவராக அனில் ஜெயின் (Anil Jain) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Announcement !
உரையாடலில் சேர் (2)
2 கருத்துகள்
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: please upload current affairs
    please upload current affairs
  2. Saju
    Profile
    Saju
    Saju
    Said: SIR WAITING FOR CURRENT AFFAIRS FROM 12TH SEPTEMBER PLEASE UPLOAD
    SIR WAITING FOR CURRENT AFFAIRS FROM 12TH SEPTEMBER PLEASE UPLOAD
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!